×

ராமர்கோயில் நன்கொடை திருட்டு விவகாரம்: அறக்கட்டளை பொருளாளர் பதவி விலக மறுப்பு

 

புனே: அயோத்தி ராமர்கோயில் நன்கொடை திருட்டு விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் எந்த பங்கும் இல்லாததால் பதவி விலகப்போவதில்லை என்று அறக்கட்டளை பொருளாளர் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய மகாராஜ்,” அயோத்தி ராமர் கோயில் நிர்வாகத்தில் மேற்பார்வை குறைபாடுகள் இருந்தன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஸ்டேட் வங்கி ஊழியர்கள். வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் பின்னணியை சரிபார்த்து கூடுதல் விழிப்புடன் செயல்பட்டு இருக்க வேண்டும்.

திருடப்பட்ட தொகையின் அளவு எனது தனிப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ.3கோடியாக இருக்கலாம். தற்போது நடந்து வரும் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை திருப்தியாக இருக்கிறது. பதவி விலகுவதாக வந்த தகவல்கள் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பரப்பப்பட்டவை. நன்கொடை திருட்டு விவகாரத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த பங்கும் இல்லை என்பதால் இதற்காக நான் பதவி விலகப்போவதில்லை. நான் சவால்களை கண்டு ஓடிப்போகும் குணம் கொண்டவன் இல்லை. போராடவேண்டிய சூழல் ஏற்படும்போது களத்தைவிட்டு விலகிச் செல்வது எங்கள் தர்மம் அல்ல.

பொருளாளராக எனக்கும் சில பொறுப்புகள் உள்ளன. அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதியை மேற்பார்வையிடுவதே எனது கடமை. உண்டியல்களில் செலுத்தப்பட்ட நன்கொடைகளில் மட்டுமே முறைகேடுகள் நடந்துள்ளது. அறக்கட்டளையின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட நிதிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்றார்.

Tags : Ram Temple ,Pune ,Ayodhya Ram Temple ,Maharashtra, ,Ayodhya Ram Temple Trust ,Govind Dev Giri Maharaj… ,
× RELATED அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு...