×

கையில என்ன கிடைச்சாலும் எடுத்து அடிங்க… ரூ.50 கோடி வாங்கிட்டுதான் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா பண்ணாங்க… திண்டுக்கல் சீனிவாசன் பகீர்

 

திண்டுக்கல்: திண்டுக்கல் அதிமுக அலுவலகத்தில் கிழக்கு, மேற்கு மாவட்டம் சார்பில் அண்ணா தொழிற்சங்கத்தின் பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து பேசியதாவது: அதிமுகவிலிருந்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததற்கு மிகப்பெரிய குதிரை பேரம் நடந்துள்ளது. ரூ.50 கோடி அளவில் வாங்கியுள்ளார்கள். இவர்கள் மீண்டும் எம்எல்ஏ சீட்டு வாங்கி விடுவார்களாம். என்னடா இது ஊரா? நாடா? எதுவுமே புரியவில்லை. இவர் சொன்னவுடன் அனைவரும் மீண்டும் ஓட்டு போடுவார்களாம். இவர்கள் அனைவரும் மந்திரி ஆவார்களாம்? அப்போதுதான் புரட்சி எழுமாம். குதிரை பேரத்திற்காக பல கோடிகள் வாங்கியுள்ள குற்றச்சாட்டை கவர்னரிடம் கூறியுள்ளோம். சட்டம் தன் கடமையை செய்யும்.

அதிமுக ரத்தத்தை சிந்தி இவர்களை எம்எல்ஏ ஆக்கிய பின் ராஜினாமா செய்வார்களாம். இவர்கள் எந்த தொகுதியில் நின்றாலும் கையில் என்ன கிடைத்தாலும் எடுத்து அடியுங்கள். அவர்களை வெற்றி பெற விடக் கூடாது. நன்றி கெட்ட நாய்கள். நீங்கள் வளர வேண்டும் உங்கள் குடும்பம் வளர வேண்டும் என்றால் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். இந்த கட்சியை காட்டி கொடுத்து வெளியே சென்றவர்கள் வாழ தகுதியற்றவர்கள். இந்த துரோகத்திற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.  மன்னிப்பு கேட்டவர்களுக்கு மன்னிப்பு கொடுத்து விட்டோம். மாவட்ட செயலாளர் பதவி கேட்கின்றனர். அதை நீங்கள் சொல்லாதீர்கள். மறுபடியும் வாங்க நியாயமான பதவி கொடுப்பார்கள்.

நத்தம் விஸ்வநாதனுக்கு துணை பொதுச்செயலாளர், வேலுமணிக்கு துணை பொதுச்செயலாளர், மற்றவர்களுக்கு அமைப்பு செயலாளர் பதவி. இதெல்லாம் ரோட்டில் செல்கின்ற பதவியா? அமைப்பு செயலாளர் என்றால் எவ்வளவு பெரிய வேலை கட்சியின் முக்கியமான பதவி. அது இவர்களுக்கு வேண்டாம் என்று சொன்னால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். சி.வி.சண்முகம் பொதுக்குழுவை கூட்டி உன் ஆண்மையை காட்டு என கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி ஆண்மையை காட்டியதால் தான் மிதுன் என்ற மகனை வைத்துள்ளார். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். நிச்சயமாக கொல்லும்.

நம்மை விட்டு சென்றவர்கள் ஆரம்பத்தில் எப்படி இருந்தார்கள்? தற்போது எடப்பாடி பழனிசாமியை குறை சொல்லிவிட்டு செல்லும்போது எப்படி இருக்கிறார்கள்? அனைவர் மீதும் சொத்து குவிப்பு வழக்கு இருக்கிறது. ஜெயலலிதா என்ன மரியாதை கொடுத்தாரோ, அதே மரியாதையை எடப்பாடி பழனிசாமியும் தற்போது வரை கொடுத்து வருகிறார். வரும் 30ம் தேதி மாவட்ட கூட்டங்கள் அனைத்தும் முடிந்த பின்பு சவுக்கடி சாட்டையை எடுத்து எடப்பாடி பழனிசாமி வீச போகிறார். அதுதான் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் வீசிய சாட்டை. இவ்வாறு பேசினார்.

‘ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே…’
திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘முதல்வர் விஜய் கரூருக்கு சென்று 41 நபர்களுக்கு பணி கொடுத்துள்ளார் மகிழ்ச்சி. ரூ.800 கோடி, ரூ.1000 கோடி, ரூ.10,000 கோடி வைத்துள்ள நடிகருக்கு என்ன பிரச்னை. சொந்த செலவில் பணம் கொடுத்தால் அனைவரும் பாராட்டுவார்கள். ஊரான் விட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே என்று சொல்லி அரசாங்க பணத்தை எடுத்து கொடுத்தால் இதெல்லாம் வாழ்க்கையா? இப்படி எல்லாம் வாழலாமா? என்ன கேடு’’ என்றார்.

 

Tags : AIADMK ,Dindigul Srinivasan Bagir ,Dindigul ,Anna Trade Union Council ,Former Minister ,Dindigul Srinivasan ,Tevag… ,
× RELATED ஜெயக்குமாரின் குட்டி ஸ்டோரி..! வெயில்...