திருவண்ணாமலை, ஜூலை 13: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வார இறுதி விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால் சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நினைக்க முக்தித்தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அரசு விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் விழாக்காலம் போல பக்தர்கள் தரிசனத்துக்காக குவிகின்றனர். அதனால் ஒவ்வொரு வார இறுதி நாட்களும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகிவிட்டது. நீண்ட நேரம் வரிசையில், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் தரிசனத்துக்காக வருகை தருகின்றனர்.
அதன்படி, வார இறுதி விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கும் போதே தரிசன வரிசையில் கூட்டம் காத்திருந்தது. பின்னர் காலை 10 மணிக்கு பிறகு படிப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அதனால் கோயில் உட்பிரகாரம் மட்டுமின்றி, வெளி பிரகாரத்தில் காத்திருப்பு கூடங்கள் நிரம்பியதால், வட ஒத்தைவாடை தெரு வரை தரிசன வரிசை நீண்டது.
அதேபோல், பொது தரிசன வரிசை அனுமதிக்கப்பட்ட ராஜகோபுரம் தொடங்கி, தென் ஒத்தைவாடை தெருவரை தரிசன வரிசை நீண்டிருந்தது.
கோடை காலம் முடிந்த பிறகும் வெயில் பாதிப்பு குறையவில்லை. நேற்று 100 டிகிரி கடந்து வெயில் சுட்டெரித்தது. ஆனாலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை காணப்பட்டது. வழக்கம் போல, நேற்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். கிரிவலப்பாதையின் அஷ்ட லிங்க சன்னதிகள் மற்றும் இடுக்குப் பிள்ளையார் கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில், ஆனி பிரமோற்சவத்தை முன்னிட்டு, ஐந்தாம் நாளான நேற்று அண்ணாமலையார் கோயிலில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.
விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
