இஸ்லாமாபாத்: அரபிக்கடலுக்கு மேல் ரேடாரில் இருந்து மறைந்த போயிங் சரக்கு விமானத்தை தேடும் பணியில் பாகிஸ்தான் கடற்படை மற்றும் விமானப்படை களமிறங்கி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷர்ஜாவில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டு இருந்த கே2 ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 சரக்கு விமானம் வழிசெலுத்தல் அமைப்பில் ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை ரேடார் தொடர்பை இழந்தது.
இதில் ஐந்து விமானக் குழுவினர் இருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாயமான விமானத்தை கண்டறிவதற்கு பல்வேறு முகமைகள் மூலம் கடலில் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவையும் தேடுதல் பகுதிக்கு கூடுதல் கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளன. பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ்-சல்பிகர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் சிதைந்த பாகங்கள் மீட்பு: சரக்கு விமானத்தின் சிதைந்த பாகங்கள், பலுசிஸ்தான் கடற்கரையில் உள்ள ஓர் மாரா பகுதிக்குத் தெற்கே 53 கடல் மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்து. விமானத்தில் சென்ற பாகிஸ்தானை சேர்ந்த கேப்டன் முகமது ரிஸ்வான் இத்ரிஸ், முதல் அதிகாரி பைசல் ஜடோய், விமானப் பொறியாளர்கள் முகமது ஹமீத் மற்றும் முகமது ஆரிப் சித்திக்வி, மற்றும் லோட்மாஸ்டர் முகமது தவுபிக் கான் ஆகியோர் பிழைத்திருக்க வாய்ப்பு குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
