×

நீராதாரத்தை பாதிக்கும் அபாயம் தென்பெண்ணையில் சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

*பருவ மழைக்கு முன் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

போச்சம்பள்ளி : நெடுங்கல் தென்பெண்ணை ஆற்றில், ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பருவ மழைக்கு முன் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து, திம்மாபுரம் பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல், பேரூஅள்ளி, மருதேரி, பாரூர், அரசம்பட்டி மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்று வழியாக பாம்பாறு அணைக்கு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், நெடுங்கல் பேரூஅள்ளி இடையே அமைந்துள்ள தென்பெண்ணை ஆற்றில், பல வருடங்களாக சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆற்றை ஆக்கிரமத்து காடுகள் போல் வளர்ந்து காணப்படுகிறது.

தற்போது கேஆர்பி அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்கிறது. இந்நிலையில், நெடுங்கல் பேரூஅள்ளி தென்பெண்ணை ஆற்றில், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது.

இதனால் ஆற்றன் நீராதாரம் பாதிக்கப்படுகிறது. வருடம் முழுவதுமாக ஆற்றில் வரும் தண்ணீரை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், படர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால், ஆற்றின் நீர்வரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, சீமை கருவேல மரங்களை அற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து பாசன வசதி விவசாய சங்க மாநில தலைவர் சிவகுரு கூறுகையில், நெடுங்கல் பேரூஅள்ளி, தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீர் கால்நடைகளுக்கும், கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இப்பகுதிகளில், உள்ள விவசாயிகள் இந்த தென்பெண்ணை ஆற்று நீரை நம்பி வருடம் முழுவதும் நெல், மா, தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இந்த தெண்பெண்ணை ஆற்றில் வருடம் முழுவதும் தண்ணீர் வருவதால் விவசாயம் செழிந்து வருகிறது.

ஆனால், தற்போது பல வருடமாக சீமை கருவேல மரங்கள் முளைத்து பெரிய மரங்களாகி ஆறு முழுவதும் ஆக்கிரமித்து காடு போல் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், நெடுங்கல் பேரூஅள்ளி தென்பெண்ணை ஆற்றில் செல்லும் தண்ணீரை கருவேல மரங்கள் உறிஞ்சி வருகிறது. எனவே மரங்களை அடியோடு அகற்ற வேண்டும் என்றார்.

Tags : Nedungal Tennenai River ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளிகளில்...