புதுடெல்லி: மே மாதம் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதை அடுத்து இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீட் மறுத்தேர்வின்போது வினாத்தாள் கசிவை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் இந்தியாவில் டெலிகிராம் செயலி தற்காலிகமாக முடக்கப்பட்டது. இந்நிலையில் டெலிகிராம் செயலிக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீசில்,‘‘டெலிகிராம் செயலியில் திருட்டுத்தனமான திரைப்படங்கள், ஒடிடி உள்ளடக்கங்கள் மற்றும் பிற ஒலி-ஒளிப் பொருட்கள் பரவலாக பகிரப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பதிப்புரிமை மீறப்பட்ட உள்ளடக்கங்கள் தொடர்ந்து கிடைப்பது, விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் தவிர்ப்பது அல்லது முழுமையற்ற பதிலளிப்பு ஆகியவை நடைமுறையில் உள்ள சட்டக் கட்டமைப்பின் கீழ் கூடுதல் விசாரணை மற்றும் நடவடிக்கைக்கு வழிவகுக்கக்கூடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
