மாதவரம், ஜூலை 2: திருவிக நகர் மற்றும் செம்பியம் பகுதியில் குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 2 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவிக நகர் நட்டால் கார்டன் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (26), சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது சில குற்ற வழக்குகள் உள்ளன. திருவிக நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு ஒன்றில் தொடர்ந்து இவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனையடுத்து, கடந்த மாதம் 15ம் தேதி ராமச்சந்திரனை பிடிக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராமச்சந்திரனை நேற்று திருவிக நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று, சென்னை கொளத்தூர் பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (46). இவர் மீது செம்பியம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட குற்ற வழக்கு ஒன்றில் இவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனையடுத்து நீதிமன்றம் கடந்த மாதம் 13ம் தேதி செல்வகுமாரை பிடிக்க பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த செல்வக்குமாரை நேற்று செம்பியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
