சென்னை: அரசு ஊழியர்களை ஊக்குவிக்க வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்த பின்னர் அதை மீண்டும் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் உரிமையாக கேட்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியில் இருக்கும் போது, கூடுதல் கல்வித்தகுதியை பெறும் அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது.
நிதிச்சுமை காரணமாக 2020ம் ஆண்டு முந்தையை கொள்கையை ரத்து செய்த தமிழக அரசு ஒரே தவணை ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதை எதிர்த்தும், உயர்கல்வி பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கக் கோரியும், அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஆர்.கலைமதி அடங்கிய அமர்வு, உயர்கல்வி தகுதி பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து அரசு எடுத்த கொள்கை முடிவை சட்டவிரோதம் எனக் கூற முடியாது. எனவே, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. அரசு ஊழியர்களை ஊக்குவிக்க வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்ட பின்னர் அதை மீண்டும் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் உரிமையாக கேட்க முடியாது என்று உத்தரவிட்டனர்.
