×

இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்பு; வெனிசுலா நிலநடுக்க பலி எண்ணிக்கை 589 ஆக உயர்வு: 3000 பேர் படுகாயம்

லா குவைரா: வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது. 2980 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணிகளில் ஈடுபட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் வெனிசுலா வந்துள்ளனர்.  வெனிசுலா நாட்டின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நடந்தன. முதலில் 7.2 ரிக்டர் அளவில் சான் பெலிப் அருகே நிலநடுக்கம் பதிவானது. அதனைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் தாக்கியது.

1900ம் ஆண்டுக்குப் பிறகு அந்நாட்டைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கத்திற்கு பிறகு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காரகஸ் மற்றும் துறைமுக நகரமான லா குவைரா உள்ளிட்ட பகுதிகள் உருக்குலைந்துள்ளன. அந்த நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறுகையில், ‘‘பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலநடுக்கத்தினால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதில் பலி எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது. 2980 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மீட்பு பணிகளுக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் வெனிசுலா வந்துள்ளனர்’’ என்றார். சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் கடுமையான சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகள் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் மின்சாரம் மற்றும் செல்போன் தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மீட்பு பணிகளுக்காக சிறப்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனம் செல்போன் மற்றும் இணைய சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக வழங்குகிறது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி இரவு பகலாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

* காயமின்றி குழந்தை மீட்பு
வெனிசுலாவின் லா குவைரா பகுதியில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பச்சிளம் குழந்தை ஒன்று காயமின்றி உயிருடன் மீட்கப்பட்ட நிகழ்வு மீட்புக் குழுவினரிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் 12 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண் ஆகியோரும் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். ஒரு நாய் இடிபாடுகளுக்குள் உயிருடன் மீட்கப்பட்டு அதற்கு தண்ணீர் புகட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

* 50 ஆயிரம் பேர் மாயம்?
நிலநடுக்கத்தில் 50 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வெனிசுலாவை நிலைகுலைய வைத்துள்ளது. வெனிசுலாவின் தலைநகர் காரகஸ், லா குவைரா அகிய பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. இந்த பேரழிவில் 188 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Venezuela ,La Guaira ,northern part of Venezuela ,
× RELATED வெனிசுலா நிலநடுக்கம்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920ஆக உயர்வு