×

போக்சோ சட்டத்தில் 1000 ஆசிரியர்கள் கைதாகியுள்ளனர்: உயர் கல்வித்துறை அமைச்சர் மீது போக்சோ வழக்கின் கீழ் நடவடிக்கை; சேலம் கமிஷனர் ஆபீசில் சமூக ஆர்வலர் புகார்

 

சேலம், ஜூன் 26: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மீது போக்சோ வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார். சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் மீது நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், பள்ளி குழந்தைகளிடம் நடந்த முறை மிகவும் அருவருக்கத்தக்கதாகும்.

அவர் மீது இதுவரை போக்சோ வழக்கு பதிவு செய்யப்படவில்லை. போக்சோ சட்டம் அமலுக்கு வந்ததில், கல்வித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றுள்ளனர். `பேட் டச்’ செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர்களும் ஜெயிலுக்கு சென்றுள்ளனர். எனவே அமைச்சர் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்.

அதில், போலீஸ் கமிஷனர் மீதும் வழக்கு தொடரப்படும். அவர் மந்திரியாக இருந்தாலும் தந்திரியாக இருந்தாலும் அவரை விடமாட்டேன். குற்றம் செய்யும் நோக்கமில்லை என அவர் சொல்லவே முடியாது. தாத்தா, மாமன் என இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெண்களுக்கான பாதுகாப்பை முதல்வர் எப்படி உறுதி செய்வார். அவரை தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : Salem Commissioner’s Office ,Salem ,Salem Police Commissioner’s Office ,Tamil Nadu ,Higher Education ,Minister ,Piyush ,Tamil Nadu Higher Education… ,
× RELATED இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: வாலிபர்களுக்கு வலை