பட்டுக்கோட்டை அருகே மகாராஜசமுத்திரம் காட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மாளியக்காடு பகுதியில் ஓடும் மகாராஜசமுத்திரம் காட்டாற்றின் இரு கரைகளிலும் மாளியக்காடு, காசாங்காடு, சேண்டாகோட்டை,
பள்ளிகொண்டான், மகிழங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இந்த காட்டாற்றில் வரும் நீரை நம்பி சுமார் 750 ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதி விவசாயிகள் ஒரு காலத்தில் குறுவை, சம்பா தாளடி என முப்போகம் சாகுபடி செய்தனர். தற்போது ஒருபோக சாகுபடியே செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மகாராஜசமுத்திரம் காட்டாற்றில் மழை, வெள்ளக் காலங்களில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

இதனால் காட்டாற்றைச் ஒட்டியுள்ள சுமார் 750 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழிந்துவிடும் பரிதாப நிலைமை கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வருகிறது. காரணம் இந்த காட்டாற்றின் குறுக்கே ஒரு பாலம் இல்லாததுதான். இந்த காட்டாற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு அரசுகளுக்கு வைத்து வருகின்றனர். ஆனால் இன்று வரை வெறும் கோரிக்கையாகவே இருந்து வருகிறது.

இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில்,
காட்டாற்றை சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த பகுதியில் சுமார் 750 ஏக்கரில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் இந்த பகுதியில் தூக்குத்தேருக்கு புகழ்பெற்ற கதிராளம்மன் கோயிலும் உள்ளது. நாங்கள் ஒவ்வொரு முறையும் கிராம மக்களாக ஒன்றுகூடி நிதி திரட்டி காட்டாற்றின் குறுக்கே சிமெண்ட் குழாய் பொருத்தி மண் பாலங்கள் அமைத்து பயன்படுத்தி வருகிறோம். மழை, வெள்ளக் காலங்களில் இந்த காட்டாற்றில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

அப்போது வெள்ளப்பெருக்கில் அந்த மண்பாலங்கள் காட்டாற்று நீரில் அடித்துச் செல்லப்படும். இதுபோன்ற மழை, வெள்ளக் காலங்களில் எங்களது நெற்பயிர்களை பார்க்கக்கூட எங்களால் செல்ல முடியாது. உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறோம். இந்த மகாராஜசமுத்திரம் காட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர புதிய அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இவர்களின் கோரிக்கைக்கு புதிய அரசு செவி சாய்க்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என கூறியுள்ளனர்.

Related Stories: