×

நெம்மாரா ஊராட்சி அலுவலகத்தில் காங்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்தது-அதிகாரி தப்பினார்

*வேறு கட்டிடத்துக்கு மாற்ற கோரிக்கை

பாலக்காடு : நெம்மாரா ஊராட்சி அலுவலகத்தில் காங்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் அதிகாரி தப்பினார். அலுவலகத்தை வேறு கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பாலக்காடு மாவட்டம் நெம்மாரா டவுன் பகுதியில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. அதிகாரியாக அன்ஷாத் பணிபுரிகிறார். அவர் அமர்ந்திருக்கக்கூடிய இடத்தில் மேற்கூரையில் காங்கிரீட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது.

இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பினார். கடந்த 2023ம் ஆண்டு இந்த அலுவலகத்தின் கட்டிட பணிகள் முடிந்து திறக்கப்பட்டது. ஆனால் மூன்று ஆண்டுக்குள் கட்டிடத்தின் மேற்கூரை பூச்சுகள் பெயர்ந்து விழுந்தவண்ணம் உள்ளன.

பெயர்ந்து வீழ்ந்த பகுதியில் இரும்புக்கம்பிகள் வெளியே தெரிந்தப்படி உள்ளது. மேலும், அந்த பகுதிகளில் விரிசல்களும் தென்படுகிறது.பொதுமக்கள் நாள்தோறும் அதிகளவில் வந்து செல்லக்கூடிய அலுவலகம் என்பதால் இந்த அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்தூர் தாலுகா அலுவலக தாசில்தார் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்றும், மேல் அதிகாரிகளுக்கு ஆய்வு அறிக்கை சமர்ப்பித்து பொதுமக்கள் பயன்படும் விதமாகவும், அதிகாரி அமர்ந்து பணியாற்றக்கூடியதாகவும் உள்ள வேறு கட்டிடத்திற்கு மாற்றவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தரக்குறைவான நிலையில் கட்டிட வேலைகள் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Nemmara Panchayat ,Palakkad ,Panchayat ,Nemmara Town ,
× RELATED டெலிகிராம் மீதான தற்காலிக தடை விதித்த...