×

கூடலூர் ஏழு முறம்பகுதியில் அனுமதியின்றி மண் திட்டுகள் வெட்டி அகற்றம்: நடவடிக்கை எடுக்க சமூகஆர்வலர்கள் வலியுறுத்தல்

 

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கும் அதற்கான தளங்கள் அமைப்பதற்கு வனத்துறை, புவியியல் துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை ஆகியவை மூலம் ஆய்வுசெய்து அனுப்பப்படும் பரிந்துரை அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து வருகிறது. மேலும் இதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த சதுர அடியில் வீடுகள் கட்டுபவர்கள் அனுமதி பெறுவதற்கு மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்படுவதாக புகார் உள்ளது. ஆனால் பெரிய அளவிலான கட்டுமான பணிகள் எந்தவித தடையும் இன்றி விரைவாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் பெரிய அளவில் மண் திட்டுகளை அகற்ற முழுமையாக தடை உள்ளது. எனினும் தடையை மீறியும் உரிய அனுமதி இன்றியும் கட்டுமான பணிகளுக்காக பெரிய அளவில் மண் திட்டுகள் அகற்றப்படுவது தொடர்ந்து வருவதாகவும், இவ்வாறு வெட்டி அகற்றப்படும் மண் அங்கிருந்து லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு புத்தூர் வயல் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஏழுமுறம் பகுதியில் தனியார் நிலத்தில் மிகப்பெரிய அளவில் மண் திட்டுகள் வெட்டி அகற்றப்பட்டு அங்குள்ள பாறைகளும் உடைக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உரிய ஆய்வு செய்து முறைகேடுகள் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Koodalur ,Nilgiri district ,Forestry, Geographical Department and Agricultural Engineering Department ,
× RELATED ‘‘ஆய்வு செய்ய வந்துள்ளோம்’’ என்று...