புதுடெல்லி: “இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி பாஜ அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “கடந்த 12 ஆண்டுகளில் இந்திய இளைஞர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் காட்டிய தன்னம்பிக்கை ஒரு முக்கிய அடையாளமாக திகழ்கிறது.
இந்தியா உலகின் முன்னணி புத்தொழில் மையங்களில் ஒன்றாக உள்ளது. இந்த வெற்றி கதைகளில் பல நமது இளைஞர் சக்தியால், அதுவும் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்து எழுதப்படுகின்றன. அறிவியல், தொழில்நுட்பம் முதல் உற்பத்தி, விண்வௌி, செமிகண்டக்டர், டிரோன்கள் வரை பல்வேறு துறைகளில் இந்திய இளைஞர்கள் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர்.
நாட்டின், உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் துறைகளில் இந்திய இளைஞர்கள் பங்களிப்பதை காண்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நமது இளைஞர்கள் விளையாட்டு துறையிலும் அளவற்ற பெருமைகளை கொண்டு வந்துள்ளனர். எணணற்ற சர்வதேச போட்டிகளில் நம் இளைஞர்கள் தொடர்ந்து தேசிய பெருமையை உயர்த்தி வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
