போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், ஆளும் பாஜ 2 இடத்திலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் எளிதாக வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் பாஜ பொதுச் செயலாளர் தருண் சக், மாநில செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். பாஜவிடம் 48 வாக்குகள் உபரியாக இருப்பதால் 3வது வேட்பாளராக மகேஷ் கெவத் அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் சார்பில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஐதராபாத் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள குற்ற வழக்கு பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடப்படாததால் மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் காங்கிரசார் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது, “மீனாட்சி நடராஜன் மீது நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரது மனுவை ஏற்குமாறு தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்“ என கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மேலும், “இது ஜனநாயக படுகொலை மற்றும் திட்டமிடப்பட்ட சதி” என்றும், தங்களது 62 எம்.எல்.ஏக்களுடன் டெல்லி சென்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து முறையிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
மேலும் இது சம்பந்தமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையில், மீனாட்சி நடராஜனின் மனு நிராகரிக்கப்பட்டதால், 3ம் இடத்திற்கு போட்டியிட்ட பாஜ வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் காங்கிரஸ், தனது எதிர்ப்பை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தீவிரப்படுத்தியுள்ளது.
