சென்னை: இந்தியாவின் பிரதமர் பதவியை தொடர்ந்து 4399 நாள்கள் வகித்ததன் மூலம் இந்தியாவில் தொடர்ச்சியாக அதிக காலம் பதவி வகித்த பிரதமர் என்ற புதிய சாதனையை நரேந்திர மோடி படைத்திருக்கிறார். இதற்காக அவருக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி வரை தொடர்ந்து 4398 நாள்கள் பதவி வகித்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது. 2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி தொடங்கி இன்று 4399 ஆம் நாளாக பிரதமர் பதவியில் தொடர்வதன் மூலம் மோடி அவர்கள் புதிய சாதனை படைத்துள்ளார்.
12 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது, உட்கட்டமைப்புகளையும், டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புகளையும் ஏற்படுத்தியது என பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சிக்கு பல அடையாளங்கள் உள்ளன. இந்தியாவை பசியும், வறுமையும் இல்லாத, அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற வல்லரசாக மாற்றும் முயற்சியிலும் அவர் வெற்றி பெற்று சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
