×

தமிழகத்தில் தொடர்ந்து சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கு..! மக்கள் போராடும் நிலை உருவாகும் என வேல்முருகன் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் நாளுக்குநாள் சட்டம்-ஒழுங்கு படிப்படியாக சீர்குலைந்து வருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டி உள்ளார். மாநிலத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தவெக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்றும் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில் வேல்முருகன் கூறியிருப்பதாவது, திண்டிவனம் அருகே சலூன் கடை உரிமையாளர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். திருச்சியில் ரவுடி பாதுஷா ஓட ஓட விரட்டி விரட்டிக் கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில், மதுக் குடிப்பகத்தில் பொன்னாம்பட்டியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நவீன்குமார் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

வகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 12 வயது, 15 வயது சிறார்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை, பெரம்பூரில் தன் கணவனை மனைவியே ஆண் நண்பருடன் சேர்ந்து வெட்டி கொன்றதாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள பாலக்கரையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக்க 7 சிறுவர்கள் உட்பட 9 பேரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தகரை அருகே 85 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்க்கொடுமை செய்துவிட்டு தப்பிய நபரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இப்படி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருவதால் . மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் குற்றச் செயல்களின் தொடர்ச்சியாகும். கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் தங்கள் உயிருக்கு அச்சம் கொண்டு வாழும் நிலை உருவாகியுள்ளது.

ஆளும் அரசு தொடர்ந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது. காவல்துறை முழுமையாக அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், குற்றவாளிகளுக்கு தைரியம் அதிகரித்துள்ளது. குற்றங்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், வெற்று அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. இதனால் ஏழை, நடுத்தர மக்களும், பெண்களும், வியாபாரிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர். காவல் நிலையங்களில் புகார் கொடுப்பதற்கு மக்கள் அச்சப்படாத வகையில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்ய வேண்டும்.கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை வழங்கும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் மக்கள் அமைதியாக வாழ வேண்டுமென்றால், உடனடியாக சீர்குலைந்துவரும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும். இல்லையென்றால் டாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் போராட்டம் போல சட்டம் ஒழுங்குக்கும் மக்கள் போராடும் நிலை உருவாகும். எனவே சமூகவிரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யவேண்டியது அரசின் கடமை என்று வலியுறுத்தி இருக்கிறார்.

 

Tags : Tamil Nadu ,Velmurugan ,Chennai ,Tamil Nadu Life Party ,Velmurughan ,
× RELATED தமிழகத்திற்கு வராமல் ஆந்திரா...