கருத்து வேறுபாடுகளை அண்ணாமலை முன்பே கூறியிருக்கலாம் – நயினார் நாகேந்திரன் பேட்டி

சென்னை: பாஜக-விலிருந்து அண்ணாமலை விலகி இருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை பற்றி அண்ணாமலை முன்பே கூறியிருக்கலாம் என்றார்.

எனக்கு தனிப்பட்ட முறையில் அண்ணாமலையோடு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கடந்த தேர்தலில் கூட அண்ணாமலை 100 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். பாஜக-விலிருந்து வெளியேறியவர்கள், திரும்பி வந்த வரலாறும் உள்ளது. அப்படி கட்சி திரும்புவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். விலகியவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப பாஜக-விற்கு வரலாம்.

யாரை நம்பியும் பாஜக-விலிருந்து வெளியேற வேண்டாம். உலகின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாக பாஜக திகழ்கிறது. தமிழகத்திலும் பாஜக பலமான கட்சியாகவே இருக்கிறது. பாஜக, பிரதமர் மோடி வழியில் இயங்கி வருகிறது. பாஜக தற்போது தமிழகத்தில் 2 சதவீத வாக்குகளை தான் வாங்கியிருக்கிறது என்ற தவறான கருத்து உள்ளது.

2024-ஆம் ஆண்டு 11 சதவீத வாக்குகளை தமிழகத்தில் பாஜக வாங்கியது. 138 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 23 நாடாளுமன்ற தொகுதிகளில் பெறப்பட்ட வாக்கு சதவீதம் ஆகும். ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் வெறும் 27 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டோம். ஒப்பிட்டு பார்த்தால் இந்த தேர்தலில் குறைந்த இடங்களில் போட்டியிட்டு அதிக சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறோம், இதே கூட்டணியோடு சேர்ந்து உள்ளாட்சி தேர்தலில் பாஜக போட்டியிடும் என்றார்..

 

Related Stories: