×

அமெரிக்க ராணுவத்திற்கு சவால் விடுக்கும் வகையில் சீன பாலைவனத்தில் அணுஆயுத கூடாரங்கள்: செயற்கைக்கோள் படங்களில் பகீர் தகவல்

 

பீஜிங்: சீன ராணுவத்தின் மிக நீண்ட தூர அணு ஏவுகணைகளை பாதுகாக்கும் வகையில் பாலைவனத்தில் பிரம்மாண்ட ஏவுதளங்கள் மற்றும் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டு வருவதை செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. சீன ராணுவம் கடந்த ஆறு ஆண்டுகளில் கிழக்கு சின்ஜியாங் பகுதியில் 2 எண்கோண வடிவ ராணுவ அமைப்புகளை உருவாக்கியது. கடந்த செப்டம்பர் மாதம் பீஜிங்கில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்ததன் 80ம் ஆண்டு விழாவில், கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணைகளை சீனா காட்சிப்படுத்தியிருந்தது. சின்ஜியாங் மற்றும் கன்சு மாகாணங்களில் உள்ள பாலைவனப் பகுதிகள் சீனாவின் அணுசக்திப் படைகளின் முக்கிய தளங்களாக நீண்டகாலமாக இருந்து வருகின்றன.

அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறியும் ‘ஹோயன்-1’ செயற்கைக்கோள் எச்சரிக்கை அமைப்புகளையும் சீனா முன்பே மேம்படுத்தியிருந்தது. இந்நிலையில், சீனாவின் மிக நீண்ட தூர அணு ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகே அதிநவீன ஏவுதளங்கள், பதுங்கு குழிகள் மற்றும் தகவல் தொடர்பு மையங்களை சீனா மிக ரகசியமாக உருவாக்கி வருவதை புதிய செயற்கைக்கோள் படங்கள் தற்போது வெளிப்படுத்தியுள்ளன. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு செய்த இந்த செயற்கைக்கோள் படங்களில், நடமாடும் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்காக 80க்கும் மேற்பட்ட புதிய ஏவுதளங்கள் பாலைவனத்தில் அதிவேகமாக உருவாக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, கடந்த 11ம் தேதியிட்ட செயற்கைக்கோள் படங்கள், சின்ஜியாங் எண்கோண வடிவ ராணுவ தளத்தின் எல்லையில் ராணுவ செயல்பாடுகள் தீவிரமாக நடப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த பிரம்மாண்ட கட்டுமானங்கள் குறித்து ஹவாய் பசிபிக் போரம் ஆராய்ச்சி மையத்தின் இணை ஆய்வாளர் அலெக்சாண்டர் நீல் கூறுகையில், ‘ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பாலைவனப் பகுதியில் புதிய ராணுவ கட்டமைப்புகள் பிரம்மாண்டமான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. சீனாவின் அணு ஆயுதப் பலத்தை பன்மடங்கு அதிகரிக்கவும், அதனை பல்வகைப்படுத்தவும் இந்த பணிகள் நடக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் அணுசக்தி தகவல் திட்ட இயக்குனர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன் கூறுகையில், ‘இது போன்ற பிரம்மாண்ட கட்டுமானத்தை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. இது மிகவும் வியத்தகு முயற்சியாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். சீனாவின் அணு ஆயுதப் பெருக்கம் குறித்து அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு தைவான் விவகாரத்தில் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். அணுசக்தி கொள்கையில் ‘முதலில் பயன்படுத்த மாட்டோம்’ என்ற வியூகத்தை சீனா கொண்டிருந்தாலும், தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் அணு ஆயுத அச்சுறுத்தலை சீனா பயன்படுத்தக்கூடும் என்று சர்வதேச தூதர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவின் பென்டகன் பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, வரும் 2030ம் ஆண்டுக்குள் 1000 அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைக்க சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது. கார்னகி சர்வதேச அமைதிக்கான நிறுவனத்தின் மூத்த அணுசக்தி கொள்கை ஆய்வாளர் டோங் ஜாவோ கூறுகையில், ‘இந்த எண்கோண வடிவ அமைப்புகளும் கோபுரங்களும் ஹமி ஏவுகணை தளத்தில் சீனாவின் அணுசக்தி செயல்பாடுகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : desert ,US military ,BEIJING ,eastern Xinjiang region ,
× RELATED ஜூன் 1ம் தேதி முதல் தலைமை செயலக ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாயம்