×

வாகனங்களுக்கு இடையூறாக பிளக்ஸ் பேனரை வைத்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரரின் கையை உடைத்த தவெக நிர்வாகிகள் கைது: கும்பகோணத்தில் பரபரப்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் வாகனங்களக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைத்து தவெக நிர்வாகிகளை தட்டி கேட்ட போலீஸ்காரரின் கையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவுக்கு அமைச்சர் வினோத்தை வரவேற்று நேற்றுமுன்தினம் இரவு தவெகவினர் நால்ரோடு பகுதியில் தஞ்சாவூர்-மயிலாடுதுறை சாலையை இணைக்கும் இடத்தில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பேனர்களை குறுக்கே வைத்தனர்.

அப்போது அந்த வழியாக இரவு ரோந்து சென்ற போலீஸ்காரர் தேவநாதன்(35), அவர்களை கண்டித்து சாலையின் குறுக்கே வைத்திருந்த பேனரை அகற்றும்படி கூறினார். அவர்கள் அகற்றாததால் போலீஸ்காரரே பேனரை அகற்ற முயன்றபோது தவெக நிர்வாகிகளான பைராகிதோப்பை சேர்ந்த அருண் (21) மற்றும் காளி (30) ஆகியோர் தேவேந்திரனை சரமாரி தாக்கி அவரது வலது கையை பிடித்து முறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் போலீஸ்காரர் தேவநாதனின் வலது கையின் மணிக்கட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற போலீசார், அங்கு வலியால் துடித்த தேவநாதனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேவநாதன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து அருண், காளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், போலீஸ் காரரின் கையை உடைத்தது தவெக நிர்வாகிகள் இல்லை என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. ஆனால், போலீஸ்காரரின் கயை உடைத்த இருவரும் தவெக கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரில் அவர்களின் படம் இடம்பெற்று உள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Kumbakonam ,Amman Temple Festival ,Kumbakonam, Thanjavur district ,Minister ,Vinotha ,
× RELATED நெல்லை, தென்காசியில் கண்ணில்...