சென்னை: டாஸ்மாக் கடைகளில் ரூ.10க்கு காலி பாட்டில்களை திரும்ப பெறும் உத்தரவை திரும்ப பெறக்கோரி எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை 12 தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் கொடுத்து ரூ.10 பெறும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தால் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் ஊழியர்களின் கோரிக்கையை டாஸ்மாக் தலைமையகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அதைதொடர்ந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் அருகே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் திட்டமிட்டப்படி தமிழ்கம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் 12 தொழிற்சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்டார் ஒன்று கூடி முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்களை தலைமை அலுவலகம் அருகே தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும் டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நிலைமை பெரிய அளவில் உருவானததை தொடர்ந்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்த போராட்டத்தில் ஈடுபட்ட 12 தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களை அதிகாரிகள் அழைத்தனர். அதன்படி ஒரு தொழிற்சங்கத்திற்கு 2 நிர்வாகிகள் என்ற விகிதத்தில் 12 தொழிற்சங்களின் சார்பில் மொத்தம் 24 நிர்வாகிகளை போலீசார் பேச்சுவார்த்தைக்கு அனுமதித்தனர். அதைதொடர்ந்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் தற்போது காலி பாட்டில்கள் திரும்ப பெறுவது குறித்து டாஸ்மாக் தலைமை உயர் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதேநேரம் இந்த போராட்டத்தால் சென்னை மண்டலத்தில் 1500 டாஸ்மாக் கடைகள் இன்று பகல் 12 மணிக்கு திறக்காமல் அனைத்து ஊழியர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால், சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் குவிந்துள்ளனர். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு அந்தந்த காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை தமிழகம் முழுவதும் உள்ள 12 டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர். முற்றுகை போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
