×

டிவியை பார்த்தாலே கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை சம்பவங்கள் தான்; தமிழகத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க முதல்வர் விஜய் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி 62 வயதுடைய முதியவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று, அந்தோணிராஜ் என்கிற விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே குபேந்திரன் என்கிற 16 வயது சிறுவன் முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமும் மக்களிடையே அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனையில் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சிகளை பார்த்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் மீதான குற்றங்கள் போன்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருப்பது தமிழகத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்து மக்கள் மத்தியில் கடும் கவலையை உருவாக்கியுள்ளது.

“சிறுகுழந்தைகளின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்துள்ளேன்” என்று பெருமையோடு கூறும் முதல்வர் விஜய், பெண்குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு, காவல்துறை நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசு இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகளை அடக்க வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இல்லை என்றால், ”கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” செய்தால் பயனில்லை.

Tags : Chief Minister ,Vijay ,Tamil Nadu ,Premalatha Vijayakanth ,Chennai ,DMDK ,General Secretary ,Marakanam ,Villupuram district ,Antonyraj… ,
× RELATED விஜய் தரப்பு அளித்த “வாக்குறுதி”.! 3...