பூந்தமல்லி: போரூரில் இன்று காலை மரக்குடோன் உள்பட 2 கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது மொய்தீன். இவர் போரூரில் குன்றத்தூர் சாலையில் எம்.எஸ்.நகர் பகுதியில் மரக்குடோனுடன் கடையும் நடத்தி வருகிறார். இங்கு, வீட்டிற்கு தேவையான கதவு, ஜன்னல் மற்றும் வாசக்கால் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 5க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்றிரவு வழக்கம் போல் வேலை முடிந்தவுடன் ஊழியர்கள், கடையை மூடிவிட்டு சென்று விட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை கடையிலிருந்து அதிகளவில் புகை வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் மளமளவென்று கடை முழுவதும் தீ பரவியது. மரக்கடை என்பதால் தீயானது வேகமாக கடை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அருகில் இருந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான மின்சார பெட்டிகள் தயாரிக்கும் குடோனுக்கும் தீ பரவியது.
இந்நிலையில் பூந்தமல்லி, கோயம்பேடு, விருகம்பாக்கம், வானகரம், மதுரவாயல் மற்றும் கிண்டி பகுதியில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து போரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், நேற்றிரவு முழுவதும் இந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், மீண்டும் மின்சாரம் வந்ததால் மின்கசிவு ஏற்பட்டு கடையில் தீ பிடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
