×

நாடு முழுவதும் நாளை12.5 லட்சம் மெடிக்கல் கடைகள் ஸ்டிரைக்.!!

டெல்லி: ஆன்லைன் மருந்து விற்பனையை எதிர்த்து மருந்தாளுநர்கள் (Pharmacist) மற்றும் மருந்து விற்பனையாளர்கள் போராட்டத்தை அறிவித்து உள்ளனர். நாடு முழுவதும் நாளை 12.5 லட்சத்திற்கும் அதிகமான மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஸ்டிரைக் அறிவிப்பு காரணமாக தமிழகத்தில் சுமார் 42,000 மருந்தகங்கள் நாளை மூடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மருந்தகங்களின் போராட்ட அறிவிப்பு காரணமாக ஏற்படும் இன்னல்களை சமாளிக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி, அகில இந்திய வேதியியலாளர்கள் மற்றும் மருந்து வணிகர்களின் அமைப்பு (AIOCD) சார்பில் 2026, மே 20 (புதன்கிழமை) அன்று நாடு தழுவிய ஒரு நாள் அடையாளக் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான மருந்துச் சீட்டு மற்றும் சரிபார்ப்பு இன்றி ஆன்லைனில் மருந்துகள் விற்கப்படுவதாகவும், ஆன்லைன் மூலம் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணிகள், தூக்க மருந்துகள், மற்றும் கருக்கலைப்பு மருந்துகள் எளிதாகக் கிடைப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.எனவே கொரோனா காலத்தில் தற்காலிகமாக கொண்டு வரப்பட்ட e-pharmacy செயல்பாட்டுக்கான அரசாணையை, ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என AIOCD அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

அதே போல கார்ப்பரேட் ஆன்லைன் மருந்தகங்கள் வழங்கும் அதிக தள்ளுபடிகள் காரணமாக, உள்ளூர் சில்லறை மருந்துக்கடைகளால் அவர்களுடன் போட்டியிட முடிவதில்லை, இது சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கிறது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Tags : Delhi ,Tamil Nadu… ,
× RELATED ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஒன்றிய அரசு