ரிஷிகேஷ்: உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் அருகே உள்ள காண்ட் கான் பகுதியில், உஜ்ஜையினி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் காண்ட் கிராமப் பகுதியில் நிகந்துள்ளது.
ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டு அந்தரத்தில் தொங்கியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பராமரிப்புக்காக ரயில் கொண்டு செல்லப்பட்டபோது பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் மற்றும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தடம் புரண்ட சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு மூத்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தண்டவாளங்களுக்கு அருகே பெருங்கூட்டம் கூடியது. பின்னர், அரசு ரயில்வே காவல்துறையினர் அக்கூட்டத்தைக் கலைய செய்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
