மாநிலங்களவை எம்.பி சோனியா காந்தி சுவாசக் கோளாறு மற்றும் அசௌகரியம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த 79 வயதான மாநிலங்களவை எம்.பி.யான மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீப ஆண்டுகளில் பல உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக குருகிராமில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த அறுவை சிகிச்சையின் தன்மை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை விரிவான தகவல்களை வெளியிடவில்லை என்றாலும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஜனவரி மாதத் தொடக்கத்தில், சுவாசக் கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். டெல்லியின் குளிர்காலச் சூழல் மற்றும் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு ஆகியவற்றால் ஏற்பட்ட மூச்சுக்குழாய் ஆஸ்துமாவின் லேசான தீவிரமே அவரது நிலைக்குக் காரணம் என்று மருத்துவர்கள் அப்போது கருதியிருந்தனர்.
இந்திய அரசியலில் பல தசாப்தங்களாக செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்து வரும் சோனியா காந்தி, மாநிலங்களவைக்கு வருவதற்கு முன்பு ஐந்து முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியின் தீர்மானங்கள், கூட்டணி அரசியல் மற்றும் அமைப்பு கட்டமைப்பில் முக்கிய பங்காற்றி வந்த அவர், இரண்டு முறை கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்று வழிநடத்தியுள்ளார்.
