லக்னோ: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 14 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்திருந்தது. ஐபிஎல் தொடரின் 50வது போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. அதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீசியது. லக்னோ அணியின் துவக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ், அர்ஷின் குல்கர்னி களமிறங்கினர். 2வது ஓவரின்போது மழை குறுக்கிட்டு, சிறிது நேரம் கழித்து போட்டி மீண்டும் துவங்கியது. அதையடுத்து மார்ஷ், அர்ஷின் இணை பொறுப்புடன் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். க்ருணால் பாண்ட்யா வீசிய 10வது ஓவரில் அர்ஷின் (17 ரன்) ஆட்டமிழந்தார்.
அதன் பின், மார்ஷ் உடன் பூரன் இணை சேர்ந்தார். இடையில் மீண்டும் மழை பெய்ததால் போட்டி தடைபட்டு, மழை விட்ட பின்னர் துவங்கியது. மிட்செல் மார்ஷ் பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் வேட்டையாடினார். 49 பந்துகளில் அவர் சதம் விளாசினார். அந்த நிலையில், 14வது ஓவர் முடிவில் 3வது முறையாக மீண்டும் மழை குறுக்கிட்டு போட்டி தாமதம் ஆனது. அப்போது, மிட்செட் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 9 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 107 ரன் எடுத்து களத்தில் இருந்தார். பூரன் 9 பந்துகளில் 14 ரன் எடுத்திருந்தார். அணியின் ஸ்கோர் 1 விக்கெட் இழப்புக்கு 145 ஆக இருந்தது.
