×

முசிறி பெரியார் பாலம் அருகே மின்சாரம் தாக்கி மில் தொழிலாளி பரிதாப உயிரிழப்பு: முசிறி போலீஸ் விசாரணை

 

முசிறி: முசிறி பெரியார் பாலம் பகுதியில் உள்ள மின் கம்பத்தின் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, கழுகூர் துர்க்கை அம்மன் தெருவைச் சேர்ந்தவர் பழனிமுருகன். இவரது மகன் குமரவேல் (வயது 23). திருமணம் ஆகாத இவர், நாமக்கல் பகுதியில் உள்ள தென்பாண்டியன் பஞ்சு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் குமரவேல் நேற்று இரவு வேலைக்கு செல்வதற்காக ஊரில் இருந்து புறப்பட்டு முசிறி பெரியார் பாலத்தில் வந்து இறங்கியுள்ளார்.

அப்போது பாலத்தில் உள்ள ஒரு மின் கம்பத்தின் அருகே குமரவேல் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சுருண்டு விழுந்த குமரவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி காவல் துறையினர், குமரவேலின் உடலைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள முசிறி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : MUSIRI PERIYAR BRIDGE ,MUSIRI POLICE ,Musiri ,Karur District ,Khuthalai Taluga ,Kaghukur Turkai Amman Street ,
× RELATED ஏழாயிரம்பண்ணை அருகே கல்குவாரி நீரில்...