சென்னை: தங்கத்தின் மீதான முதலீடு எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு பவுன் ரூ.50ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது ரூ.1.34 லட்சத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில் தான், அமெரிக்கா இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் காரணமாக, திடீரென முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக, கச்சா எண்ணெய் மீது கவனத்தை திருப்பியதால், திடீரென தங்கம் விலை பவுனுக்கு ஒரு லட்சத்துக்கு சரிந்தது.
அந்த வகையில், நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,600க்கும் விற்பனையானது. தொடர்ந்து மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. அதாவது தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,200க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து பார் வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையானது.
நேற்று காலையில் தங்கம், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால், நேற்று மாலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது நேற்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,100க்கும், பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12,800க்கும் விற்பனையானது.
அதே போல நேற்று மாலையில் வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையானது. தங்கம், வெள்ளி விலை திடீரென அதிரடியாக உயர்ந்தது நகை வாங்குவோருக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,050க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.265க்கு விற்பனையாகிறது.
