×

மாமல்லபுரம் சோழி பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைத்து படகு சவாரி ஏற்படுத்த வேண்டும்

மாமல்லபுரம், மே 1: மாமல்லபுரம் சோழி பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைத்து படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரிவிக்கின்றனர். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை நுழைவு பகுதிக்கு அருகே, 11.48 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோழிப் பொய்கை குளம் அமைந்துள்ளது. இந்த குளம் ஆழ்வார்கள் காலத்தில் நீர் ஆதாரமாகவும், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயனுள்ளதாகவும் விளங்கியது. மேலும், மாமல்லபுரத்தில் கிழக்கில் கடலும், மேற்கில் பக்கிங்காம் கால்வாயும் அமைந்துள்ளது. இதனால், ஒரு சில இடங்களில் உப்பு நீர் வந்தது.

மேலும், இந்த குளத்தில் உள்ள ஊற்றால் மாமல்லபுரம் நகரில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, சுகாதாரமான குடிநீர் கிடைத்தது. இந்த குளத்தை சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் பராமரிக்காமல் விட்டதால் பாழடைந்து தூர்ந்து போய் அலங்கோலமாக காணப்பட்டது. இந்த குளத்தை சீரமைக்க விசிக மாநில தொண்டரணி செயலாளர் சிறுத்தை வீ.கிட்டு தலைமையில், மல்லை நீர் நிலைகள் மற்றும் மீட்போர் சங்கம் ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக ஜனார்த்தனம் என்பவரை நியமித்து, அப்போது காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த பொன்னையாவை நேரில் அழைத்து வந்து குளத்தை தூர்வார அனுமதி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து ரூ.47 லட்சம் நிதி திரட்டி கடந்த 2018-2019ம் ஆண்டு குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தி, சுமார் 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச 44வது சதுரங்க போட்டியையொட்டி செஸ் வீரர்களை கவரும் வகையில், சோழிப் பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைத்து, கரையை சுற்றி பல்வேறு வகையான மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கி பணிகள் நடந்தது. ஆனால், தரமற்ற முறையில் நடந்த பணிகளால் தற்போது பராமரிப்பின்றி, நடப்பட்ட மரக்கன்றுகள் மண்ணோடு மண்ணாக மக்கி, குளத்தை சுற்றியும் கோரை புற்கள் முளைத்து பார்ப்பதற்கு அலங்கோலமாக காணப்படுகிறது. இதனை பராமரிக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகளும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கோரை புற்களை அகற்றி, சோழிப் பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைத்து சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் ஜாலியாக பொழுதை கழிக்கும் வகையில் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், சோழிப் பொய்கை குளம் 11.48 ஏக்கர் பரப்பளவும், 1.50 கி.மீ நீளமும் கொண்டதாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்தில் இருந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயப் பணிகள் நடந்தது. மாமல்லபுரம் நகருக்கே நீர் ஆதாரமாக விளங்கியது. இந்த குளத்தை தூர்வாரி சீரமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, பரவலாக தண்ணீர் கிடைக்கும். வாரத்தின் இறுதி நாளான சனி-ஞாயிறு ஆகிய 2 நாட்கள் படகு சவாரி ஏற்படுத்தினால், மாமல்லபுரம் சுற்றுலா வரும் பயணிகளும், உள்ளூர் மக்களும் ஜாலியாக பொழுதை கழிப்பார்கள், என்றனர்.

Tags : Mamallapuram Chozhi Poigai pond ,Mamallapuram ,Mamallapuram East Coast Road ,Chozhi Poigai ,
× RELATED ‘கோவிந்தா’ கோஷம் விண்ணதிர...