சென்னை: சட்டப்படிப்பு முடித்தவர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சி உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் நேற்று நடந்தது. 1,250 பேர் வழக்கறிஞர்களாக பதிவு செய்தனர். இதில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பேரறிவாளனும் ஒருவர். நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி சிறப்புரையாற்றினார், பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வரவேற்றார். இந்திய பார் கவுன்சில் துணைத்தலைவர் பிரபாகரன் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத்தலைவர் கார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தனர்.
வழக்கறிஞர் சந்திரசேகர் முன்மொழிந்தார். பதிவுக்குழு தலைவர் வழக்கறிஞர் பாலு, புதிய வழக்கறிஞர்களுக்கு பதிவு பிரமாணம் செய்தார். பதிவுக்குழு உறுப்பினர் பிரிசில்லா பாண்டியன் நன்றி கூறினார். பேரறிவாளனுக்கு எதிராக ராஜிவ் கொலை வழக்கு மட்டும் இருந்தது. இந்த வழக்கில், அவர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதால் வழக்கறிஞராக பதிவு செய்ய ஆட்சேபமில்லா சான்று காவல்துறை தரப்பில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
