சென்னை: ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் முறையாக உணவு பாதுகாப்பு துறை விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கொளுத்தும் கோடை வெயில் காரணமாக ஐஸ்கிரீம் விற்பனை தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ளது.
உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் உரிமம் பெற்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி, சந்தையில் தேவை அதிகரித்திருப்பதால் உரிய உரிமம் இல்லாமல் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்வது, இயற்கை சர்க்கரைக்கு பதிலாக சுவைக்காக நிறமிகள் மற்றும் செயற்கை சர்க்கரையை கலப்பது, சலவைத் தூள் கூட்டுப் பொருட்கள், குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் போன்ற கலப்படங்கள் சேர்ப்பது, ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானம் தயாரிப்பில் அசுத்தமான நீர் பயன்படுத்துவது உட்பட கோடைக் காலத்தில் உணவு பாதுகாப்பு துறையின் விதிகளுக்கு மாறாக கலப்படங்கள் அதிகரிக்கக்கூடும்.
எனவே, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஐஸ்கிரீம் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் குளிர்பானம் உற்பத்தி நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தவும், கோடைக் காலம் முழுவதும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உற்பத்தியில் உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கவும், மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இது தொடர்பாக சோதனை நடத்துவதோடு, புகார்கள் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
