புதுடெல்லி: பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும், தொகுதி மறுவரையறை ஆணையம் அமைப்பதற்கும் மூன்று மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் காரசார விவாதங்கள் நடந்தன. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்கையில்,’மதத்தின் அடிப்படையில் முஸ்லிம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கேள்விக்கே இடமில்லை. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் சிறிதும் அனுமதிக்காது. மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்பதே எங்கள் அரசின் தீர்மானம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அத்தகைய இட ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு விரோதமானது. சமாஜ்வாடி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முஸ்லிம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கினால், அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று கூறினார்.
