×

மீஞ்சூர் அருகே வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு சரமாரி அரிவாள் ெவட்டு

சென்னை, ஏப்.16: மீஞ்சூர் அருகே, கஞ்சா போதையில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கு படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டினர். இதில், ஒருவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த, வல்லூர் வாலாஜா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை சேர்ந்த, முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவி தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டிற்குள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், மாணவியை கண்டதும் கையில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு, அந்த கும்பலில் இருந்த ஒருவனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, படுகாயம் அடைந்த மாணவியை மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மீஞ்சூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அமைதியான இடமாக இருந்த தங்களது குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதை அதிகரித்து இருப்பதாகவும், கஞ்சா போதை ஆசாமிகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மர்ம கும்பலில் ஒருவன் மட்டுமே பிடிபட்டுள்ளதாகவும், மற்ற இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த சம்பவம் குறித்து, மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிப்பதற்காக மட்டுமே மர்ம கும்பல் வந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Meenjur ,Chennai ,
× RELATED உரிமம் புதுப்பிக்காமல் துப்பாக்கி வைத்திருந்த சிஐஎஸ்எப் வீரர் கைது