×

கல்வி, தனம், ஞானம் சிறந்து விளங்கச் செய்யும் புதன் வழிபாடு

நவகிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் வலுவாக இருந்தால் சிறந்த அறிவாளியாகவும், நல்ல படிப்பறிவுள்ளவராகவும், இறைவனிடத்தில் சிந்தனையுள்ளவராகவும் இருப்பார்கள்.
கல்வி தரும் புதன்
புதன் பகவானுக்கு சவும்யன் என்ற பெயர் உண்டு. புதனை வழிபட்டால் அகங்காரம் அழியும். அமைதி கிடைக்கும். புதன் பகவானை நினைத்து விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும் என்பதால் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என யார் வேண்டுமானாலும் விரதத்தை அனுசரிக்கலாம்.
புதன்கிழமை அன்று ஸ்ரீ நாராயணனை வழிபட்டு பின்னர் நவகிரகங்களை வணங்கி, பின் புதன் பகவான் முன் நின்று வழிபட வேண்டும். புதன்கிழமை அன்று பூஜையறையில் ஒரு அகல் தீபம் ஏற்றி, இஷ்ட தெய்வத்தை வணங்கி, பின்பு பெருமாளை வழிபடவும். புதன்கிழமை தோறும் பச்சை பயிறு வேக வைத்து பசு மாட்டுக்கு கொடுக்கலாம்.
புதன் உடலில் நரம்புக்கும், தோலுக்கும் அதிபதி. ஜாதகத்தில் இவரது பலம் கூடியவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வித்யாகாரகனாகிய புதன் பகவான் கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் ஆவார். நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும்.
புதன் பகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். உகந்த நிறம் பச்சை நிறம். பாசிப்பயிறு உகந்த தானியம். வடகிழக்கு புதனுக்கு உரிய திசை ஆகும். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது.
புதன் பகவானின் திருத்தலமாகிய திருவெண்காடு செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறு, புதன்கிழமையன்று, உபவாசம் இருந்து புதன் பகவானை வழிபட்டால் வெற்றி நிச்சயம் உண்டாகும்.
புதனை ஜாதக ரீதியாக பலப்படுத்திக்கொள்ள, புதன் பகவானுக்கு உரிய நாளான புதன்கிழமை அன்று விரதம் இருந்து பச்சை ஆடை அணிந்து, புதன் பகவானுக்கும் பச்சை ஆடை அணிவித்து வழிபட வேண்டும்.
பச்சைப் பயிறு அன்னம், பாசிப் பருப்பு கலந்த பொங்கல் இவற்றை புதன் பகவானுக்கு நிவேதனம் செய்து, மற்றவர்களுக்குத் தானம் செய்ய வேண்டும்.
புதன் பகவானுக்கு அதி தேவதை ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆவார். அதனால் பிரதி புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவதும் எளிதான பரிகாரமாகும்.
புதன் பகவான் ஜனவசிய (வியாபார) பிரிவினைச் சேர்ந்தவர். அதனால் வியாபாரிகள் இவரின் அருளைப் பெற ஸ்ரீ மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும்.
புதன் காயத்ரி மந்திரம்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக அஸ்தாய தீமஹி
தன்னோ புத : பிரசோதயாத்.

Tags : Lord ,God ,
× RELATED அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்