×

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் பாடகர் அறிவு சந்திப்பு..!!

சென்னை: தலைமைச் செயலகம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே பாடகர் தெருக்குரல் அறிவு, முதலமைச்சர் விஜயை சந்தித்து பேசினார். இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். இதனால் கிராமப்புற மாணவர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்படுகிறார்கள். அதன் காரணமாக அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கடந்த பல வருடங்களாகவே கோரிக்கைகள் எழுகின்றன.

இந்நிலையில், நீட் தேர்வு மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பாக போராட்டம் நடந்து வருகிறது. அதில் காவல் துறையினர் புகுந்து தடியடி நடத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும், டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையிலும் சில இடங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பிரபல இசை கலைஞரான தெருக்குரல் அறிவு இன்று தலைமைச் செயலகம் வெளியே திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அவர், தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், தலைமைச் செயலகத்திற்குள் அனுமதியின்றி புகுந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக கூறி பாடகர் அறிவுவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, முதல்வர் விஜய் நேரம் கொடுத்த நிலையில் தெருக்குரல் அறிவு அதே காவல் துறை வாகனத்திலேயே தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். முதலமைச்சர் உடனான சந்திப்பின் போது நீட் தேர்விற்கு எதிராக பல ஆலோசனைகளை தெருக்குரல் அறிவு வழங்கியதாக கூறப்படுகிறது.

Tags : Chief Minister ,Vijay ,Chennai ,INDIA ,
× RELATED சப்தகன்னியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா