திரைக்கு வந்த ‘ஜமா’ என்ற படத்துக்கு பிறகு பாரி இளவழகன் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்திருந்த ‘அன்பே டயானா’ என்ற படம் வெற்றிபெற்றுள்ளது. இதையொட்டி நடந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பாரி இளவழகன் பேசுகையில், ‘எனது ‘ஜமா’ படத்தை தொடர்ந்து இப்படத்துக்கு அனைவரும் அளித்த ஆதரவை நான் என்றும் மறக்க முடியாது. ‘அன்பே டயானா’ கதையை விஜய் சேதுபதியிடம் சொன்னபோது, ‘உங்களின் இன்றைய பயணத்துக்கு மில்லியன் டாலர் ஸ்டுடியோஸுடன் இணைந்தால், அது சரியான கூட்டணியாக இருக்கும்’ என்று சொல்லி, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனிடம் என்னை பற்றி நல்லவிதமாக பேசியிருந்தார். அவரது நம்பிக்கைக்கும், அவர் அளித்த ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றி.
யுவராஜ் கணேசன் ஆரம்பம் முதல் என்மீதும், எனது கதையின் மீதும் வைத்த நம்பிக்கையே வெற்றிக்கு காரணமாக அமைந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோஜா மேடம் இதில் நடிக்க சம்மதித்ததே எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ரம்யா ரங்கநாதனின் உழைப்பையும் பாராட்டியாக வேண்டும். சிலர் என்னிடம், ‘ஏன் ‘அன்பே மேஜிக்’ என்று தலைப்பு சூட்டாமல், ‘அன்பே டயானா’ என்று பெயர் வைத்தீர்கள்?’ என்று கேட்டனர். ‘மேஜிக்’ என்ற வார்த்தை படத்தின் உள்ளே மட்டுமே சிறப்பாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே அதை தலைப்பாக்கவில்லை. கதை எழுதும்போதே அந்த வார்த்தை ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று நம்பினேன்’ என்றார்.
