- ஸ்ரீ ஓசுரம்மன் கோயில் தீமிதி திருவிழா
- அக்னிகுந்தம்
- திருவள்ளூர்
- தீ மிதி திருவிழா
- ஸ்ரீ ஓசுரம்மன் கோவில்
- மாப்பு
- Kadambattur
திருவள்ளூர்: கோயில் திருவிழாவில் அக்னி குண்டத்தில் தவறிவிழுந்து காயம் அடைந்த முதியவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு பகுதியில் உள்ள ஸ்ரீ ஓசூரம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 1ம் தேதி கூழ் ஊற்றுதலும், அக்னி சட்டி புறப்பாடும் நடைபெற்றது.
10ம் நாளான நேற்று மாலை 6 மணியளவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அனைவரும் கரகத்துடன் ஊர்வலமாக சென்று கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து ஓசூரம்மனை தரிசனம் செய்தனர். இந்த நிலையில், தீ மிதிக்கும் போது முதியவர் ஒருவர் கால்தவறி அக்னி குண்டத்தில் விழுந்து காயம் அடைந்தார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று முதியவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
