தஞ்சாவூர், ஆக.1: தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பகுதியில் குடிநீர் குழாய் பழுது பார்க்க தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாததால் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி 1வது வார்டு பள்ளி அக்ரகாரம் பழைய கும்பகோணம் ரோடு மற்றும் ஹரி நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய் பழுது பார்க்க பல மாதங்களுக்கு முன்பு சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது.
பின்னர் பழுது சரிபார்க்கப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால் தோண்டப்பட்ட பள்ளம் இது நாள் வரை மூடப்படாமல் உள்ளது. சுமார் 5 அடி ஆழத்தில் 4 அடி அகலத்தில் உள்ள பெரும்பள்ளத்தால் சாலை விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக காலை மாலை நேரங்களில் பள்ளி வேன்கள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் இச்சாலை வழியே சென்று வருகிறது.
இரண்டு பள்ளமும் சாலை திருப்பத்தில் அமைந்துள்ளதால் வாகனங்கள் பள்ளத்தில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை மாநகராட்சி அலுவலர்களுக்கு புகார் செய்தும் பள்ளம் மூடப்படாமல் காட்சியளிக்கிறது. பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் விழித்து கொண்டு சாலையோரம் உள்ள பெரும் பள்ளங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 1வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
