சீர்காழி, ஜூலை 30: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் நகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்கா அமைந்துள்ளது இந்த பூங்காவின் மையப் பகுதியில் புனித தீர்த்த குளம் என்று அழைக்கப்படும் கரிக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் நீரை எடுத்து சட்டைநாதர் கோயில் விழா காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர். மேலும் குளத்து நீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் உரிய பராமரிப்பு இன்றி குளத்து நீர் மாசுபட்டு இருந்து வருகிறது. இந்தக்குளம் முறையாக பராமரிக்கப்படாததால் குளம் முழுவதும் செடி கொடி மண்டி படர்ந்து கிடக்கிறது. இதனால் குளம் இருப்பதே தெரியாமல் செடி கொடியால் மூடப்பட்டுள்ளது. நகரில் பல்வேறு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், மழை நீருடன் கலந்து குளத்தில் கலந்து வருகிறது.
இதனால் குளத்தின் தண்ணீர் மாசுபட்டு வருகிறது. மேலும் குளத்தில் தண்ணீர் வற்றும் போது செடி கொடிகள் காய்ந்து சில சமயங்களில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குளத்தை முழுமையாக சீரமைத்து நல்ல தண்ணீர் நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, பொதுமக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த குளத்தை முறையாக பராமரித்து மீன்கள் வளர்த்தால் இதன் மூலம் நகராட்சிக்கு வருமானம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். பூங்காவுக்கு வரும் மக்களின் நலன் கருதி காந்தி பூங்காவில் அமைந்துள்ள மிகப்பெரிய குளத்தை முறையாக பராமரித்து, குளத்தில் படர்ந்து கிடக்கும் செடி கொடிகளை முழுமையாக அகற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
