வேதாரண்யம், ஜூலை 27: மேகதாது சம்மந்தமாக தமிழக முதலமைச்சர்ஜோசப் விஜய் கர்நாடக முதலமைச்சரை சந்திக்க செல்வது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்று தமிழக கடைமடை விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் கமல்ராம் செய்தியாளகளிட் தெரிவித்ததாவது: கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணாகவும், உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாட்டு அணைக்கட்ட சட்ட விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அழைப்பு விடுவதையும் அதனை ஏற்று தமிழக முதலமைச்சர் செல்வதை நிராகரிக்க வேண்டும்.
கடந்த 2013ல் தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சிக்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட மறுத்தது. காவிரியில் தண்ணீர் திறக்த மறுப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். வழக்கில் கர்நாடக அப்போதைய முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டரோடு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களூரில் அமர்ந்து பேச உச்ச நீதிமன்றமே ஏற்பாடு செய்யும், அக்கூட்டத்தில்இரு மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க வேண்டுமென உத்தரவிட்டது.உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெயலலிதாபெங்களூர் சென்று அம் மாநில முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டரோடு பேச்சுவார்த்தையை நடத்தினார். அப்போது தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதாகவும், கர்நாடகாவில் உள்ள தண்ணீரை திறந்து விட வலியுறுத்தினார்.
அப்போது பதிலளித்த கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டர் தண்ணீரை திறக்க இயலாது என்பதை ஒரே வரியில் பதில் அளித்தார். பிறகு பேச்சுவார்த்தை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை சமர்ப்பித்தது.அதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இனி காவிரி குறித்து எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் கர்நாடகம், தமிழகம் தனிப்பட்ட முறையில் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டது. இந்நிலையில் மேகதாட்டுவில் அணைக்கட்ட எடுக்கும் முயற்சியை அரசியல் கண்ணோட்டத்தோடு நியாயப்படுத்தும் விதமாக நயவஞ்சக நடவடிக்கையாக டி.கே.சிவகுமார் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். 2013 உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கர்நாடக செல்வதை தமிழக முதலமைச்சர் நிராகரிக்க வேண்டும்.
காவிரி நீரை பகிர்ந்தளிப்பதாக இருந்தாலும், அணைக்கட்டுமானத்தை தடுத்து நிறுத்துவதாக இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மட்டுமே முடிவெடுக்க முடியும். ஆணையம் தனது கட்டுப்பாட்டிற்குள் கர்நாடகம், தமிழகத்தில் இருக்கக்கூடியஅணைகளின் நீர் நிர்வாக முறைகளை கொண்டு வர வேண்டும். ஆணையம் மறுக்கும் பட்சத்தில் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார்.
