பெரம்பலூர், ஜூலை 27: வாலிகண்டபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ், சுற்றுச்சூழல் கல்வித்திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராசு தலைமை வகித்து, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் விளக்கிக் கூறினார்.
பெரம்பலூர் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரான முகமது ஹுசைன் கலந்து கொண்டு மரம் வளர்ப்பதால் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப் படுவதை விளக்கி கூறினார். அறக்கட்டளை மேலாளர் செல்வக்குமார், முத்தமிழ் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நெருக்கடி மிக்க இடங்களில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு’ என்றத் தலைப்பின் கீழ் தனிநடிப்பு மற்றும் மௌன நாடகம் ஆகியவற்றை மாணவ மாணவியர் நடித்துக்காட்டினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் வீரையன், ராதிகா, லதா ஆகியோர் செய்திருந்தனர். சுற்றுச் சூழலின் பாதுகாப்பு குறித்து ஆசிரியர்கள் அகிலாண்டேஸ் வரி, இளையராஜா , பாண்டித்துரை ஆகியோர் உரையாற்றினர். முடிவில் தேசியப் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா நன்றிகூறினார்.
