பூச்சுகள் ஏடு ஏடாக பெயர்ந்தது; பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்த சமுதாயக்கூடம்

 

துவரங்குறிச்சி, ஜூலை 27: துவரங்குறிச்சியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் கட்டிடம் சிதிலம் அடைந்துள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மோரணி மலை முருகன் கோவில் அருகில் 2014 -15 ஆம் நிதி ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 70 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று முடிவுற்றது. ஆனால் இதுவரையிலும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. மேலும் இங்கு அமைந்துள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் முகூர்த்த நாட்களில் இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பர். சமுதாய கூடம் மக்கள் பயன் பாட்டில் இல்லாததால் மற்ற வரவேற்பு, சாப்பாடு போன்றவைகளுக்கு மற்ற திருமண மண்டபங்களையே நாடிச் செல்கின்றனர். சமுதாயம் கூடம் இருந்தும் எவ்வித பயனும் இல்லை என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமுதாய கூடம் அருகில் தற்போது ஒரு பொது கழிவறை ஒன்றை கட்டி யுள்ளனர். ஆனால் கழிவறை தண்ணீர் வசதி இன்றி கழிவறை பீங்கான்கள் உடைந்து பொது மக்கள் பயன் படுத்தமுடியாதபடி உள்ளது. மேலும் கட்டிடம் கட்டி பயன்பாட்டுக்கே வராத நிலையில் ஆங்காங்கே கட்டிடம் விரிசல் விட்டும், மேற்கூரைகள் இடிந்து கொட்டியும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் கட்டிடம் கட்டி திறக்காததால் பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தினை மீண்டும் சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் குடிகாரர்களின் கூடாரமாகவும் இக்கட்டிடம் மாறி வருகிறது. மண்டபத்தின் பின்புறத்தில் உள்ள சிறிய கட்டிடத்தின் கதவுகள் அனைத்தும் கரையான் அரித்த நிலையில் கதவின்றி திறந்த நிலையிலேயே உள்ளது.

 

Related Stories: