போடி: போடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவர்களை, கிணற்றில் தள்ளிக் கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (34). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (34). இவர்களது மகன்கள் ஸ்ரீஹரிஷ் (11), சபரீஷ் (10) ஆகியோர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்தனர். சகோதரர்கள் இருவரும் கடந்த 24ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தனர்.
பின்னர் வெளியே சென்று விளையாடிய இருவரும், திடீரென்று மாயமாகினர். தாயார் செல்வி மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ரங்கநாதபுரத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில், கரட்டுப்பட்டி கிராமத்தில் இருக்கும் தென்னந்தோப்பில் உள்ள சுமார் 100 அடி ஆழ கிணற்று நீரில், நேற்று முன்தினம் இரவு அண்ணன், தம்பி இருவரின் உடல்களை போடி தாலுகா போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் வாலிபர் ஒருவர் சகோதரர்களை அப்பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு அழைத்துச் சென்று கூழ் வாங்கிக் கொடுப்பது பதிவாகி இருந்தது. விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பியின் உறவினர் கேசவபாலாஜி (19) என்பது உறுதியானது.
போடியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரான இவரிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவரது தாயாருடன் சின்னத்தம்பி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், தனது ஆன்ட்ராய்ட் செல்போனை சின்னத்தம்பியின் மகன்கள் திருடியதாகவும் அந்த ஆத்திரத்தில் அவர்களை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
