சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தங்களது உரிமைகளுக்காகப் போராடி இந்த வெற்றியைப் பெற்றுள்ள இளைஞர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். அதேவேளையில், தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் முற்றல்ல; மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தது போல நீட்டையும் ஒழிப்போம். பொய்யான பரப்புரை, வெற்று வாக்குறுதிகளால் இளைஞர்களை திசைதிருப்பலாம் என்று சிலர் நம்புகிறார்கள்.
ஆனால், தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே வடிவமைக்க தீர்மானித்திருக்கும் தலைமுறையின் தெளிவையும், துணிவையும், உணர்வையும் அவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். கேள்வி கேட்கவும், அரசியலில் பங்கேற்கவும், அநீதியை ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கவும் இந்த எழுச்சி ஒரு தலைமுறைக்கு ஊக்கமளிக்கட்டும். விழிப்புணர்வும் அஞ்சாமையும் கொண்ட இளைஞர்களே எந்த ஜனநாயகத்திற்கும் வலிமையான அடித்தளம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
