எதிர்ப்புகளுக்கு பணிந்தது ஒன்றிய பாஜக அரசு: அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

டெல்லி: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். பிரதமர் மோடிக்கு தனது ராஜினாமா கடிதத்தை தர்மேந்திர பிரதான் அனுப்பி வைத்தார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அளித்தல், கடந்த 20ம் தேதி டெல்லியில் நடந்த ‘சலோ சன்சாத்’ பேரணியில் அமைதியாக பங்கேற்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் ஆகிய 3 முக்கிய கோரிக்கைகளை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வலியுறுத்தி வந்தது.

பிரதான் பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடரும் என தெரிவித்திருந்தது சி.ஜே.பி. பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் உறுதியாக இருந்தன. தர்மேந்திர பிரதான் ராஜினாமா நிபந்தனையால் நாடாளுமன்றம் 5 நாள் முடங்கியது. பிரதான் ராஜினாமாவை தவிர வேறு எதையும் ஏற்கப் போவதில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதவி விலகுவதாக பிரதான் அறிவித்துள்ளார்.

3.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடக்கவிருந்த நிலையில் பிரதான் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருத்து எழுதியுள்ள கடிதத்தில்; மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது. கடந்த 10 நாட்களாக நடந்த நிகழ்வுகள் எனக்கு தனிப்பட்ட அவமானமாக கருதவில்லை. முதல் நாளில் இருந்தே தவறுக்கான பொறுப்பை ஏற்று வந்துள்ளேன். போராட்டங்கள் தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக மாறக்கூடாது. சட்ட நடவடிக்கைகளால் ஒரே ஒரு மாணவரின் எதிர்காலம் கூட பாதிக்கப்படக் கூடாது. இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் முறையாக போராட்டத்துக்கு பணிந்து ராஜினாமா
இதற்கு முன் ஒன்றிய அமைச்சர்கள் பதவி விலகக் கோரி பல போராட்டங்கள் நடந்துள்ளன. மாதக்கணக்கில் போராட்டங்கள் நடந்தபோதும் ஒரு ஒன்றிய அமைச்சர் கூட ராஜினாமா செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: