பிரான்சில் ஜூன் மாத வெப்ப அலையின்போது வழக்கத்தை விட 5,724 கூடுதல் உயிரிழப்புகள் பதிவு

பாரிஸ்: பிரான்சில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலையின்போது, வழக்கத்தை விட 5,724 பேர் கூடுதலாக உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 15 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே பதிவான இந்த அதிகப்படியான உயிரிழப்புகள், இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜூன் 17 முதல் ஜூலை 2 வரை அனைத்து காரணங்களாலும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த உயிரிழப்புகள் நேரடியாக வெப்பத்தால் ஏற்பட்டவை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், இதுகுறித்த இறுதி அறிக்கை இலையுதிர் காலத்தில் வெளியிடப்படும் என்றும் பிரான்சின் தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூடுதல் உயிரிழப்புகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். அதேவேளை, 45 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே இருந்தனர். குறிப்பாக, ஜூன் 25 முதல் 27 வரை உள்ள மூன்று நாட்களிலேயே மொத்த கூடுதல் உயிரிழப்புகளில் பாதி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1947ஆம் ஆண்டு முதல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து, இந்த ஆண்டுதான் பிரான்ஸ் ஜூன் மாதத்தில் மிக அதிக வெப்பத்தை சந்தித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை கடந்தது. மேலும், பாரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயிரிழப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன. ஜூன் 22 முதல் 28 வரை உள்ள வாரத்தில் உயிரிழப்புகள் இருமடங்காக அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஜூன் 21 முதல் ஐரோப்பா முழுவதும் ஏற்பட்ட வெப்ப அலைகளால் 1,300-க்கும் மேற்பட்ட கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலின் காரணமாக, ஒரு காலத்தில் அரிதாக ஏற்பட்ட வெப்ப அலைகள் தற்போது ஆண்டுதோறும் அதிக தீவிரத்துடன் நிகழ்ந்து வருகின்றன என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார். மேலும், ஐரோப்பிய நாடுகளில் வீடுகள், பணியிடங்கள் மற்றும் பள்ளிகள் அதிக வெப்பத்தை சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்படாததால், வெப்ப அழுத்தம் ஒரு “அமைதியான கொலையாளி”யாக மாறி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: