டெல்டாவில் 4.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பாதிப்பு: நிவாரணம் வழங்க பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

திருச்சி: மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்காததால் டெல்டா மாவட்டங்களில் 4.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. அரசு உயர்மட்ட குழுவை அமைத்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார். திருச்சியில் அவர் அளித்த பேட்டி: காவிரியில் மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவாவும், மக்களவையில் டி.ஆர்.பாலுவும் கொண்டு வந்துள்ள ‘மேகதாது குறித்து விவாதிக்க வேண்டும்’ என்ற ஒத்தி வைப்பு தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

டெல்டா பகுதிகளில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் சராசரி குறுவை சாகுபடி பரப்பு 5.14 லட்சம் ஏக்கராகும். 2025ம் ஆண்டு சாதனை அளவாக 6.13 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் நிலத்தடி நீர் மற்றும் பம்ப்செட்டுகளை பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டதால் 4.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் தரிசு நிலமாக மாறிவிட்டது.

இதுகுறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும். நடப்பாண்டில் சம்பா நெல் பயிர் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதா?, வேண்டாமா? என்பதற்கான வழிகாட்டுதலை தமிழக அரசு வழங்க வேண்டும். ஏரி, குளங்கள் மற்றும் வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய காவிரிநீரை கர்நாடக அரசிடமிருந்து கேட்டு பெற வேண்டும். காவிரி நீரை விடுவிக்க மறுத்தால் தமிழகத்துக்கு இடைக்கால இழப்பீட்டு தொகையை கர்நாடக அரசிடமிருந்து பெற்றுத்தர ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: