இந்த ஆண்டு சென்னைக்கு பெருமழை ஆபத்தா? எல் நினோ தரும் முக்கிய எச்சரிக்கை

 

சென்னை: இந்த ஆண்டு சென்னைக்கு பெருமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ காலநிலை சூழல், தற்போதைய தென்மேற்குப் பருவமழை, அதனைத் தொடரும் வடகிழக்குப் பருவமழை மற்றும் 2027ம் ஆண்டின் குளிர்காலம் வரையிலும் நீடிக்க அதிக வாய்ப்புள்ளதாக இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் (2027) மாதம் வரை எல் நினோ நீடிப்பதற்கு 85% முதல் 98% வரை வாய்ப்புகள் உள்ளதாக அதன் புதிய கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த எல் நினோ சூழல் கடந்த ஜூன் மாதமே நிலைபெற்றுவிட்டதாகவும், ஜூலை – செப்டம்பர் காலகட்டத்திற்குள் இது ஒரு ‘வலுவான எல் நினோவாக’ மாறக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த அமைப்பின் இந்த அறிக்கை சென்னை மற்றும் தமிழகத்தைப் பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தற்போது சென்னையிலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் கடுமையான வெப்ப அலையும், கடலோரப் பகுதிகளில் அதிகப்படியான புழுக்கமும் நீடிப்பதற்கு பலவீனமான தென்மேற்குப் பருவமழையே காரணம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் இருந்து வரும் ஈரப்பதக் காற்று குறைக்கப்பட்டு வறண்ட சூழல் உருவாவதால், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் வழக்கத்தை விடக் குறைவான மழையே பதிவாகிறது.வரலாற்றுத் தரவுகளின்படி, 1987-க்குப் பிறகு வந்த 9 எல் நினோ ஆண்டுகளில், 8 ஆண்டுகளில் சென்னையில் ஜூன் – செப்டம்பர் காலகட்ட மழைப்பொழிவு இயல்பை விடக் குறைவாகவே (சென்னையின் வழக்கமான தென்மேற்குப் பருவமழை சராசரி 44 செ.மீ) இருந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழையைப் பலவீனப்படுத்தினாலும், எல் நினோ காலங்கள் சென்னைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்குப் பருவமழைக்கு (அக்டோபர் – டிசம்பர்) சாதகமாக அமையும் என்று வரலாற்றுத் தரவுகள் காட்டுகின்றன. வங்கக்கடலில் சாதகமான காற்றழுத்த அமைப்புகள் உருவாக இது வழிவகுக்கும். வடகிழக்குப் பருவமழை மூலமே சென்னையின் 60% ஆண்டு மழைத்தேவை பூர்த்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட மிக அதிக அளவில் வடகிழக்குப் பருவமழை பதிவான 1997, 2015 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகள் மிக வலுவான எல் நினோ ஆண்டுகளேயாகும் என்று தமிழகத்தின் பிரபல வானிலை பதிவர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இருப்பினும், வடகிழக்குப் பருவமழையின் ஒட்டுமொத்த அளவு எல் நினோவை மட்டுமே சார்ந்திருக்காமல், இந்தியப் பெருங்கடல் இருமுனைவு , மேடன்-ஜூலியன் அலைவு மற்றும் வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னங்களைப் பொறுத்தே இறுதியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் வழக்கமான குளிர்காலத்தை விட சற்றே வெப்பமான குளிர்காலம் நிலவக்கூடும். எனினும், வடஇந்தியாவின் வானிலை மேற்குத் தொடர்ச்சி இடையூறுகளாலும் பாதிக்கப்படலாம். இதற்கிடையில், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காலிக நிவாரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நாளை மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37-38°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°C ஆகவும் பதிவாகலாம். மழை பெய்யும் நாட்களுக்கு அடுத்த நாள் வெப்பநிலை சற்றே குறைந்தாலும், அடுத்த மழைப் பொழிவுக்கு இடைப்பட்ட காலத்தில் வெப்பநிலை மீண்டும் உயரக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: