‘மக்களுக்கே விபூதி அடித்த, பழனிக்கே மொட்டை போட்ட’ டூப் முதல்வர் விஜய் ஆட்சி.!! குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி…

சென்னை: பழனி கோயில் நில விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற அறநிலையத் துறை அமைச்சர் முயற்சிப்பதாக பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி திமுக குற்றம்சாட்டி உள்ளது. தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து திமுக வழக்கறிஞர் அணியின் இணை செயலாளரான பரந்தாமன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர் இந்த நிலமோசடி விவகாரத்தில் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே போல பழனிக்கு அருகே உள்ள சார் பதிவாளரை அழைக்காமல் 67 கி.மீ. தொலைவில் உள்ள சார் பதிவாளரை வரவைத்து முறைகேடு செய்துள்ளனர் என்றும் கூறி உள்ளார். உண்மைத்தன்மையை விசாரிக்காமல் அவசரமாக பழனி கோயில் நிலத்தை பதிவுசெய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பழனி கோயில் நில மோசடி தொடர்பாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “அறியாமை காரணமாக அதிகாரிகள் பத்திரப்பதிவு செய்துவிட்டனர்” என்கிறார். விசாரணை தொடங்குவதற்கு முன்பு ஒரு அமைச்சர் இவ்வாறு கூறுவது, குற்றவாளியை காப்பாற்றுவதற்கு அவர் துணை போவதை தெளிவாக காட்டுகிறது என்று பரந்தாமன் சுட்டிக்காட்டி உள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் குறித்து பதிவிட்டவர்களை பாய்ந்து பாய்ந்து இரவு நேரத்தில் கைது செய்யும் காவல்துறை, ஏன் இன்னும் இந்த நிலமோசடி விவகாரத்தில் தொடர்புடைய சார்பதிவாளரை கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். தொடர்ந்து பேசிய பரந்தாமன், இந்த நில முறைகேடு விவகாரத்தில் மாட்டி கொண்டு விடுவோமோ என்று தவெக அமைச்சர்கள் பதறுவது வெளிப்படையாக தெரிகிறது.

இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் டூப் முதல்வராக இருக்கிறார் விஜய். பொதுவாக பழனி கோயிலில் மொட்டை போடுவது வழக்கம்; பழனிக்கே மொட்டை போட்டிருக்கிறது விஜய் ஆட்சி என்றும் சாடினார். முறுக்கை முகர்ந்து பார்த்து வீராவேசமாக பேட்டியளிக்கும் அமைச்சர் ரமேஷ், இந்த விவகாரத்தில் யாரை காப்பற்ற முயற்சிக்கிறார்? ரூ.10 முதல் ரூ.15 லட்சம் திரட்டி ஒரு சொத்தை வாங்க கூட பொருளாதார ரீதியாக பலமில்லாதவர்கள் ரூ.2 கோடிக்கு இந்த நிலத்தை கிரையம் செய்துள்ளது எங்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களின் புகைப்படம் கூட இதுவரை வெளியாகவில்லை என்றால் இதன் பின்னணியில் யார் தான் இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: